Saturday 14 July 2012

சேடப்பட்டி சென்னையானால்



'தனது பதிமூன்றாவது
அகவையில் அவள்
'அம்மா''வென அலறினாள்
அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு..

அடுத்த நாள்
குடிசைக்குள் குடிபுகுந்தாள்..




அடுத்த வாரம்
அவளைக் குமரியென்றனர்..
குடிசையை பிரித்தனர்..
பந்தலிட்டனர்..பந்தியிட்டனர்..
முடிச்சுகள் மூன்று

அவள் கழுத்தை ஆட்கொண்டது..

பந்தலிட்ட பச்சைமட்டை
காய்ந்து போவதற்குள்
அப் பெண்ணின் அடிவயிறு
பெருக்க ஆரம்பித்தது..
ஆம்.. குழந்தைக்குள் குழந்தை.



பத்தாவது மாதம்
ஒரு குழந்தை ஜனிக்கப் போகிறதா
ஒரு குழந்தை மரிக்கப்போகிறதா
எனத்தெரியவில்லை..
பிரசவ வலி அவளுக்குள்
ஒரு பிரளயத்தையே
உண்டு பண்ணியது..
''அய்யோ அம்மா'' என்று
அப்பெண்ணின் அலறல்
இப்போதே செத்தால் போதும் என்ற
பொருள்படத்தான் ஓலமிட்டது..

மீசை முளைக்காத அவன்
கணவன் என்ற அந்தஸ்தில்
முகத்தில் பயத்தை
அப்பிக்கொண்டு நிற்கிறான்..
முப்பது வயதைத் தாண்டாத
அவளது பெற்றோர்
தாத்தா பாட்டி என்ற
பட்டத்தைப் பெற காத்திருக்கிறார்கள்..

கிராமத்து மருத்துவச்சியின்
தலைமையில் பிரசவமாம்..
பிரசவமானதுமுண்டு-பிறர்
சவமானதுமுண்டு..

ஆண் குழந்தைக்கு தாய்ப்பால்
பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்
ஏற்கனவே எடுத்த முடிவுதான்..

அவள் சவமாகவில்லை
பிரசவமானாள்..
முன்னதாக அவள்
சாவை சந்தித்துவிட்டுதான்
வந்திருந்தாள்...

குழந்தை பிறந்து
தொப்புள் கொடிக்கூட
அறுபடாத நிலையில்
அனைவரின் கண்களும்
குழந்தையின் இடுப்புக்குக் கீழே
குறிவைத்து குறி தேடின..
அப்பாடா..ஆண்குழந்தைதான்..
தப்பியது குழந்தை..

தாய்ப்பால் குடித்த உதடுகள்
காய்ந்து போகாத நிலையில்
தன் குழந்தைக்கு பாலூட்டினாள்..
மார்பகங்களே சுரக்காத நிலையில்
தாய்ப்பால் எப்படி சுரந்தது
எனத்தெரியவில்லை..

வயதுக்கு வந்தவுடன்
தாவணி கட்டி
அழகு பார்க்கும் பருவத்தில்
தாலி கட்டிதான் அழகுபார்த்தனர்.
அவள் அழுது பார்த்தாள் ..
அழுகை தோற்றுத்தான் போனது..




குழந்தை குமரியாய்.
குமரி கிழவியாய்..
இப்படித்தான் கிராமம் தோறும்
எத்தனை இருபதுவயது கிழவிகள்..


இந்த நூற்றாண்டிலும்
மாற்றமென்பது மருந்துக்குக் கூட இல்லை..
சேடப்பட்டி சென்னையானால்
ஒருவேளை மாற்றமடையலாம்..

No comments:

Post a Comment