Monday 30 July 2012

ஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்களின் சிறப்பான பலன்கள்


சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.

சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப ஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்பாரேயாகில் நிறைந்த வருமானமும் நல்ல வீடும் விளை நிலமும் பசு மாடுகளும் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையும். இந்த ஜாதகனுக்கு மிகவும் சுகமும் சொந்த நாட்டிலும் பிற நாட்டிலும் அரசாங்க ஆதாயம் அதிகம் உண்டாகும். அதே சமயத்தில் பாவக் கிரகங்களின் பார்வை சந்திரனுக்கு இல்லாமல் இருப்பது முக்கியம்.

வெற்றி கொள்ளும் சந்திரன் 3, 5, 7, 11 ஆகிய இடங்களில் தனித்து நிற்க அத்தகைய ஜாதகன் பெரும் செல்வம் படைத்தவன். மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பான். வாக்குவாதம் செய்வதில் வல்லவன். மருத்துவம் படித்து அத்துறையில் சிறந்து விளங்குவான். நல்ல வருமானம் பெற்று அவன் குடும்பம் விருத்தி அடையும். பகைவர்கள் அழிவார்கள். ஏனைய மற்ற இடங்களில் சந்திரனால் பலன் இல்லை. எனினும் மற்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வைக்கேற்றவாறு பலன்கள் அமையும்.

குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும். பொன், பொருள் அதிகம் சேரும். மேலும் 2ம் இடத்தின் அதிபதி குருவைப் பார்க்க இவன் கீழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8ம் இடத்தில் நின்றால் மனைவியிடம் பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம் அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து சேரும். 6ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில் பகை உண்டாகும். வியாதியால் துன்பம் ஏற்படும். 12ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். இருப்பினும் அந்த வீடு குருவின் அட்சி வீடாக இருந்தால் எந்த துன்பமும் அண்டாது என்பதாம்.

சுக்கிரன்: அசுரர்களில் குருவான சுக்கிரன் ஜாதகனின் கேந்திர கோண ஸ்தானங்களில் நிற்க மிகவும் நல்ல பலன்களைத் தருவார். பாவக் கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும் கவலை அடையவேண்டாம். அவன் பங்களா போன்ற சொத்துக்களும் பொன், முத்து ஆபரணங்களும் பெற்று சுகம் அடைவான். சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமுடன் இருந்தால் அந்த ஜாதகனுக்கு ஆயுள் குறைவு ஏற்படும். மேலும் வியாதி, வாத நோய் இவை உண்டாகும். வீடு, பொன், பொருள் நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் சுக்கிரன் 12ல் இருந்து அது ஆட்சி வீடானால் இறைவன் அருளால் நல்ல யோகமும் சயன சுகமும் உண்டாகும், இது திண்ணம்.

சனி: சூரியனின் குமாரனான மந்தன் எனப்படும் சனி பகவான் 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் நிற்க ஆயுள் தீர்க்கம் உண்டாகும். நிறைய பொருள் சேரும். சனி 9ல் இருக்க பிதுர் தோஷம் உண்டு. விரோதிகளை வெற்றி காண்பான். அரசு மூலம் லாபம் அடைந்து பேரும் புகழும் விளங்க வாழ்வான். அதிக லாபம் உண்டாகும். சனி 10ல் இருந்தாலும் நற்பலன்களையே தருவான். வாகன யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் முன்னேறி புகழ் அடைவான். சனி பகவான் 11ல் இருக்க தேவகுருவான குரு பகவான் 7ம் இடத்திலும் பாம்பான ராகு 4ம் இடத்திலும் செவ்வாய், சூரியன் இவர்கள் 3ம் இடத்திலும் நிற்க சனி ஜாதகனுக்கு சில தொல்லைகள் கொடுத்தாலும் ஆயுள் தீர்க்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய்: செவ்வாய் கிரகமானது 1, 2, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகனுக்கு நல்ல பூமி வாய்த்தலும் பெரும் பொருள் சேர்க்கையும் நல்ல விளை நிலமும் பொன் ஆபரணமும் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி பல குடும்பங்களை காக்கும் திறமை பெற்று பகைவர்களை வெற்றி கொள்ளும் வீரனாவான் என அறிக. சேய் என்று அழைக்கப்படும் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் நின்றால் இருக்கும் நிலமும் பொருளும் விரயமாகும். குடும்பத்தில் பிரிவு உண்டாகும். திருமணம் முதலிய சுப காரியங்கள் தள்ளிப் போகும். திருமணம் முடிவதில் கால தாமதம் ஆகும்.

No comments:

Post a Comment