Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்


பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு
பகருவேன் புந்தியுமே பகையுமாவர்
சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்
சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்
நீரப்பா நெடுமாலும் கோணமேற
நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்
ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே
அப்பனே புலிப்பாணி பாடினேனே


இராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியைஇலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன். [எ-று]

இப்பாடலில் தனுசு இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment