Tuesday 31 July 2012

ஜோதிடத்தில் சித்தர்களின் முக்கிய பங்கு

Picture


சோதிடம்என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

வானியல் அடிப்படை
வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது –


1. வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.
2. கணிதம் :வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. ‘கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே, ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.
3. கால அளவு முறைகள்: எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல. பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாரு:
  1. சூரியன் (ஞாயிறு Sun)
  2. சந்திரன் (திங்கள் Moon)
  3. செவ்வாய் (Mars)
  4. புதன் (அறிவன் Mercury)
  5. குரு (வியாழன் Jupiter)
  6. சுக்கிரன் (வெள்ளி Venus)
  7. சனி (காரி Saturn)
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாரு:

1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

No comments:

Post a Comment