Monday 30 July 2012

ராமேசுவரம் தீர்த்தங்கள்



புண்ணியம் தரும்

ராமேசுவரம் தீர்த்தங்கள்

ராமேசுவரத்தில் வழிபாடும், மஹோததியும் (வங்காள விரிகுடா கடல்), ரத்தினகரமும் (இந்திய பெருங்கடல்) கூடும் இடமான தனுஷ்கோடியில் (சேது) முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பார்கள். இதனால் தான் வடநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் ராமேசுவரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடிச் செல்வதை பெரும் பாக்கியமாக கொண்டுள்ளனர். ராமேசுவரத்தில் மொத்தம் 53 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 22 தீர்த்தங்கள் ராமநாதசுவாமி கோவிலுக்குள் அமைந்துள்ளன. மீதமுள்ள 31 தீர்த்தங்கள் ராமேசுவரத்தை சுற்றி அமைந்துள்ளன.

ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள தீர்த்தங்கள் பற்றி இங்கே பார்ப்போம்...

இந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்தமும் தனி மகிமை பெற்று காணப்படுகிறது. இங்குள்ள முதலாவது தீர்த்தம் மகாலெட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது இங்குள்ள அனுமார் கோவிலுக்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது தர்மராஜன் ஸ்நானம் செய்து ஐஸ்வர்யம் பெற்றதாக கருதப்படுகிறது.

இரண்டாவது தீர்த்தம் சாவித்திரி தீர்த்தம். மூன்றாவது தீர்த்தம் காயத்திரி தீர்த்தம். நான்காவது சரஸ்வதி தீர்த்தம். இந்த மூன்று தீர்த்தங்களும் இங்குள்ள அனுமார் கோவிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளன. காசிபர் மகாராஜா சாபம் நீங்கியது இந்த தீர்த்தங்களில்தான் என்பது ஐதீகம்.

ஐந்தாவது தீர்த்தம் சேதுமாதவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தெப்பக்குளம்தான் இந்த தீர்த்தம். இதில் நீராடுவதால் மகாலட்சுமியின் அனுக்கிரகமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என்கிறார்கள்.



ஆறாவது தீர்த்தம் கந்தமாதன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சேது மாதவர் கோவில் பகுதியில் அமைந்துள்ள இதில் நீராடுவதால், தரித்திரம் நீங்கி சகல ஐஸ்வரியமும் கிடைக்கும், பிரம்மஹத்தியாதி பாவம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

ஏழாவது தீர்த்தம் சுவாட்ச தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் சேது மாதவர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது. இதில் நீராடினால் நரகத்திற்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்பது ஐதீகம்.

எட்டாவது தீர்த்தம் கவாய தீர்த்தம். சேதுமாதவர் கோவில் பகுதியிலேயே அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடினால் கற்பக விருச்சவாசம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒன்பதாவது தீர்த்தம் நள தீர்த்தம். சேது மாதவர் கோவில் பகுதியில் உள்ள இதில் நீராடுபவர்கள் சூர்ய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கை.

பத்தாவது தீர்த்தமான நீள தீர்தத்தில் நீராடுவதால் சமஸ்தயாக பலனை அடைந்து அக்னியோக பதவி கிடைக்கும் என்கிறார்கள்.
11-வது தீர்த்தம் சங்கு தீர்த்தம். இதில், வத்ரிநாப முனிவர் செய்நன்றி மறந்த பாவம் நீங்கியது என்பது ஐதீகம்.

12-வது தீர்த்தமான சக்கர தீர்த்தம் சூரியன் பொன்கை பெற்றது என்றும், 13-வது தீர்த்தமான பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் பிரம்மஹத்தியாதி பாவம் தீர்ப்பதாகவும், 14-வது தீர்த்தமான சூரிய தீர்த்தம் திரிகால ஞானமும், அந்தந்த உலக பிராப்தியும் தருவதாகவும், 15-வது தீர்த்தமான சந்திர தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாசி ஞானமும், அந்தநித உலக பிராப்தியும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

16-வது தீர்த்தம் கங்கா தீர்த்தம். 17-வது தீர்த்தம் யமுனா தீர்த்தம். அதற்கு அடுத்தது கயா தீர்த்தம். இந்த 3 தீர்த்தங்களில் ஞான சுருதிராஜன் ஞானம் பெற்றதாக கூறுகிறார்கள்.

19-வது தீர்த்தம் சிவ தீர்த்தம். பைரவர் பிரம்மஹத்தி நிவர்த்தியானது இந்த தீர்த்தம் தான் என்கிறார்கள்.
20-வது தீர்த்தம் சாத்யமிர்த தீர்த்தம். அம்மன் சன்னதியில் உள்ள இந்த தீர்த்தத்தில் புகுரூனு சக்கரவர்த்தி சாபம் நீங்கப்பெற்றதாக ஐதீகம்.

21-வது தீர்த்தம் சர்வ தீர்த்தம். ராமநாதசுவாமி சன்னதி முன்புள்ள இந்த தீர்த்தத்தில் நீராடியதால் சுதரிசனர் பிறவிக்குருடு நோய் நீங்கியதாக கூறுகிறார்கள்.

22-வது தீர்த்தம் கோடி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண பகவான் தனது மாமனாகிய கம்சனை கொன்ற பாவம் நீங்கியது இந்த தீர்த்தம் என்கிறார்கள். காசியில் உள்ள கங்கை நீருக்கு சமமானதாக இந்த தீர்த்தம் கருதப்படுகிறது.

- இந்த தீர்த்தங்களில் நீராட வருபவர்களுக்கு தண்ணீரை வாளிகளில் இரைத்து ஊற்ற கோவில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாத்திரை பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பணியில் சுமார் 450 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாள் முழுக்க வேலை இருக்காது. கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களுக்கும் ஒரு முறை சென்று பக்தர்கள் மீது வாளிகளில் நீரை இரைத்து ஊற்ற வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் இவர்கள் தங்கள் பணியை முடித்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஷிப்ட்க்கு மற்றொரு நபர் வந்து விடுவார். ஒரு முறை வந்த நபர் அடுத்த முறை வர 2 நாட்கள் ஆகிவிடும்.

இவ்வாறு ஒரு முறை மட்டும் சென்று பக்தர்கள் மீது தீர்த்த நீர் இரைத்து ஊற்ற இவர்களுக்கு சம்பளம் ரூ.10 தான். இருந்தாலும், தீர்த்தமாட வரும் பக்தர்கள் இவர்களுக்கு தனியாக பணத்தை அன்பளிப்பாக தந்து மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். இதனால் தான், கடினமான வேலை என்றாலும் இந்த பணியை செய்கிறார்கள் இந்த தொழிலாளர்கள்.

- நீங்களும் ராமேசுவரம் சென்றால் இந்த தீர்த்தங்களில் தீர்த்தமாடிவிட்டு தான் வாருங்களேன்...

No comments:

Post a Comment