Tuesday 31 July 2012

செவ்வாய்.

 

Picture


3. செவ்வாய் செவ்வாய் இது தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும். சூரியனை 687.9 நாட்களில் சுற்றி வருகிறது. செவ்வாய் சகோதரன் காரகன் ஆகிறார். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது வெறித்தனமாகவும். விருச்சகத்தில் உள்ள போது வேகம் குறைவாகவும் இருக்கிறார். திருடு,வெட்டுக்காயம்,தீ காயம்,எதிரிகள்,பேராசை,அதிக காமம், போலீஸ், துணிச்சல், அரசியல் தொடர்பு ஆகிய குணங்கள் ஆகும். செவ்வாய்க்கு 4,7,8 ஆகிய பார்வைகள் உள்ளன. 1,4,7 இருப்பது நல்லதல்ல. 2,4,7,8,12 ஆம் இடங்கள் இருப்பது நல்லதல்ல. இந்த இடங்களில் இருந்தால் தோஷம் ஆகும். அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி. பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு. அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.       

                                                  அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன். சகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாயும் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இவருக்கு சிறப்பு நாட்கள்தாம். நமதுமனை மங்களம் சிறக்க செவ்வாயின் அருள் வேண்டும். செவ்வாயின் அருள் வேண்டி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

வைத்தீஸ்வரன் கோவில்
"இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால்
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம்
முதலானவையும் கூட அகலும் என்பர்."
தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.

பெயர்க் காரணம்:புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது. மற்றும் சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும் , அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.      
கோயில் அமைப்பு:நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய். எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.      

தீர்த்தம்:கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது. முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர். இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள.
      
மூர்த்திகள்:சுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம். அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. அங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு. இரண்டும் தனித்தனிச் சந்நிதிகளாக உள்ளன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் தோஷம் நீங்கப் பெறுவர். நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.      

தலப்பெருமை:முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது. இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார். அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.      

சடாயு குண்டம்:சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான். இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச் சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.      

திருச்சாந்துருண்டை:இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.      

தல விருட்சம்:கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.      

திருவிழாக்கள் : நாள்தோறும் 6 கால பூஜைகள் உண்டு. பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் ஐந்தாவது நாளன்று செல்வமுத்துக்குமரன் வைத்தியநாதரைப் பூசித்துச் செண்டு பெறும் காட்சி மிக அற்புதமான ஒன்று. உற்சவகாலத்தில் கயிலையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியிருப்பது போல் சுவாமி ஒரு புறமும், அம்பாள் ஒரு புறமுமாக எழுந்தருள, செல்வமுத்துக்குமார சுவாமி நடுவில் எழுந்தருள்வார். மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னி லையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு. ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பயணம் கீரணிப்பட்டி முத்து மாரியம்மன் திருவிழா முடிந்து தொடர்ந்து வரும் புதன்கிழமை இரவு 12 மணிக்கு மேல் அதாவது வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இப்பயணம் கீரணிப்பட்டித் திருவிழா முடிந்தபின் நடைபெறுவதற்குக் காரணம் நகரத்தார்கள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக் கீழ்க்காணும் கும்மிப்பாடல் வழி அறியலாம்.

“காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு
காவலன் மாறனழைத்து வர பூவிரிப்
புலன்மிகும் பாண்டிய நாட்டினிற்
பொங்கத்துடன் வந்தமர்ந்தானே”
பொங்கம் = பொலிவு அல்லது மகிழ்ச்சி.
வண்டிப் பயணமாகத் துவங்கி நடைப்பயணத்தையும் இன்று ஈர்த்துப் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறும் சிறப்புறு பயணமாகியுள்ளது. இது கீழச்சீவல்பட்டி, அழகாபுரி நகரத்தார்களோடு பள்ளத்தூர், குருவிக்கொண்டான்பட்டி, ஆத்தங்குடி, கோட்டையூர், சிறுகூடற்பட்டி ஆகிய ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இந்த வண்டிப் பயணத்தில் கலந்து கொள்கின்றனர். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பதிகம் ஒன்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள். “தையல்நாயகியைத் தொழுது எழுவார் தொங்கத் தொங்கத் தாலி அணிவார்”. வைத்தியநாதனைப் போற்றி எழுவாருக்கு அவனே மந்திரமும் மருந்துமாகித் தீராத நோய் தீர்த்து வைப்பான். பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான்.      

நிறம்- சிகப்பு
அணிகலன்-பவளம்
வாகனம்-அன்னம்
தானியம் -துவரை
காரகம்- பூமி,சகோதரன்,வீடு
கடவுள் - முருகன்
சுவை-துவர்ப்பு
உச்சம- மகரம்
நீசம் - கடகம்
திசைகாலம்- 7 ஆண்டுகள்
நட்பு- சூரியன்
பகை-புதன்,ராகு,கேது
சமம்-சுக்கிரன்,சனி
உபகிரகம்-துமன்
கோவில்-வைத்தீ்ஸ்வரன் கோவில்             

ஒவ்வொரு வீட்டிலும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்
செவ்வாய் 1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும்.      

செவ்வாய் 2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.      

செவ்வாய் 3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.      

செவ்வாய் 4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.
செவ்வாய் 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.      

செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.
செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.

செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருந்தால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.      

செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருந்தால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.
செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருந்தால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருந்தால் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.
செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருந்தால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.              

                                                   தென்னிந்திய மக்கள் செவ்வாய்கிழமையில் எந்த நல்ல காரியங்களும் தொடங்குவது இல்லை ஆனால் இந்தியாவின் வடமாநில மக்கள் இந்த கிழமைக்கு மங்களவார் என்று பெயர் வைத்து நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் என்று தினமலர் நாளிதழில் படித்தேன். அதனால் தான் செவ்வாய்யைப் பற்றி எழுதலாம் என்று எண்ணினேன் அதனுடன் நமது பாடமும் செவ்வாய் பற்றி வந்துகொண்டுருப்பதால் எழுதுகிறேன். நமது வீட்டில் எல்லாம் திருமண காலங்களில் பெண் பார்க்கும் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தவறாது அடிபடும் வார்த்தை செவ்வாய் தோஷம் இருக்கிறதா அல்லது இல்லையா என்றுதான். இந்த தோஷம் ஒவ்வொரு ஜோதிடரிடமும் வேறுபடும். ஒருவர் தோஷம் இருக்கும்பார் இன்னொருவர் தோஷம் இல்லை என்பார். செவ்வாய் உச்சவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பர் அல்லது செவ்வாய் நீசவீட்டில் இருக்கிறது அதனால் தோஷம் கிடையாது என்பார்கள். இதனைப்பற்றி ஆராய்வதற்கே பல வழிகள் இருக்கிறது. நான் சொல்ல வந்தது. ஒன்பது கிரகங்களில் நீங்கள் கேட்டவுடன் அள்ளி வழங்குபவர் செவ்வாய் மட்டும் தான். ஏனென்றால் செவ்வாய்கிரகம் ஒரு அக்னி கிரகம் அது மிகவும் வீரியத் தன்மை வாய்ந்த கிரகம் இருக்கும். நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் தன்மையினால் செவ்வாய் மட்டும் உடனே தருபவர். வேறு எந்த கிரகத்திடம் கேட்டாலும் பலன் உடனே நடக்காது. ஆனால் செவ்வாயிடம் மட்டும் கேட்டால் உடனே நிறைவேறும். நீங்கள் இதனை ஒரு ஆய்வாகவே எடுத்துக்கொள்ளலாம். செவ்வாயின் கடவுளாகிய முருகனிடம் ஏதோ ஒரு வேண்டுதலுடன் கேளுங்கள் அந்த காரியம் நிச்சயம் நடந்தேறும். உங்கள் வேலை உடனே நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்கிழமை பயன்படுத்துங்கள். உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருந்தால் ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை விரதம் இருந்து பாருங்கள். விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கி நல்லது நடக்கும். செவ்வாய் கிழமை நாம் பயன்படுத்தலாம். முருகனை முழு மனதுடன் வழிபட்டு அனைத்தையும் பெறுவோம்.

அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment