Monday 30 July 2012

அய்யப்பன் வரலாறு



அய்யப்பன் வரலாறு

"நாட்டின் அரசனான எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை இல்லையே! கிருஷ்ணா... நீ எனக்கு கருணை காட்ட மாட்டாயா?"

- தீவிர கிருஷ்ண பக்தரான பந்தள நாட்டு அரசன் ராஜசேகர பாண்டியன் இப்படி வேண்டாத நாட்களே கிடையாது. எறும்பு ஊற, ஊற பாறையும் தேயும் என்பார்களே? அது, இந்த பந்தள மன்னன் விஷயத்திலும் உண்மையானது.

அது எப்படி என்பதற்கு முன்பு, அய்யப்பனின் அவதாரம் நிகழ்ந்த வரலாற்றை பார்ப்போமே...

"நான் யார் தலையில் கையை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும்" என்று சிவனிடம் வரம் பெற்ற பஸ்மாசுரனை, அழகிய பெண்ணான மோகினியாக அவதாரம் எடுத்து அழித்தார் கிருஷ்ணர். அந்த மோகினியின் அழகில் ‘கவரப்பட்ட‘ சிவபெருமான், அவளை இறுக கட்டித் தழுவ, மார்கழி மாதம் பஞ்சமி திதி சனிக்கிழமை அன்று உத்திரம் நட்சத்திரத்தில் அரி-ஹர புத்திரனாக அய்யப்பனின் அவதாரம் நிகழ்ந்தது.

இனி... பந்தள நாட்டு அரசனின் குழந்தை வேண்டுதல் எப்படி நிறைவேறியது என்பதை பார்ப்போம்...

ஒரு நாள் அரசன் ராஜசேகர பாண்டியன் வேட்டைக்கு சென்று கொண்டிருந்தான். திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தான். அழகிய, தெய்வீக அம்சம் நிறைந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு, அதை அப்படியே வாரியெடுத்து அணைத்து முத்தமிட்டான்.

"கிருஷ்ணா...! உன்னை வணங்கியது வீண் போகவில்லை. குழந்தை இல்லையே என்று ஏங்கிய எனக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்துவிட்டாயே!" என்று மகிழ்ந்தான். அவனது கண்ணில் அந்த குழந்தை அகப்பட வேண்டும் என்று தான் சிவனும், கிருஷ்ணரும் அங்கே விட்டுச் சென்றிருந்தனர்.



காட்டில் கண்டெடுத்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்து சென்றான் ராஜசேகர பாண்டியன். அவனது ராணியும் அந்த குழந்தையை கண்டு மகிழ்ந்தாள். ஒரு குழந்தையை பெற்றெடுத்த உணர்வை பெற்றாள். தான் பெற்ற குழந்தை போலவே வளர்த்தாள். ‘மணிகண்டன்‘ என்ற பெயருடன் அரண்மனையில் அந்த குழந்தை வளரத் தொடங்கியது.

இதற்கிடையில், மகாராணி கர்ப்பமானாள். பத்தாவது மாதத்தில் அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. தான் பெற்ற குழந்தையையும், மணிகண்டனையும் ஒரேமாதிரியாகவே வளர்த்தாள்.

சில வருடங்கள் உருண்டோடின. "மணிகண்டன் இருக்கும் வரை, தங்கள் மகனுக்கு அரசுரிமையில் முதலிடம் கிடைக்காது" என்று தூபம் போட்டு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தான், ஒரு அமைச்சன். மணிகண்டனை ஒழிக்க முடிவெடுத்தாள் மகாராணி.

ஒரு நாள் தலைவலி என்று படுத்துக் கொண்டாள். புலிப்பால் தான் அதற்கு மருந்து என்று அரண்மனை வைத்தியர் மூலம் மன்னனிடம் சொல்ல வைத்தாள். புலிப்பால் கொண்டுவர மணிகண்டன் காட்டுக்கு அனுப்பப்பட்டார்.
கணவன் சன்னியாசம் போக இடையூறாக இருந்ததால், அவனது சாபத்திற்கு ஆளாகிய ஒரு மனைவி மகிஷி என்ற எருமையாகி விடுகிறாள். "ஒரு பிரம்மச்சாரியால் நீ கொல்லப்பட்டு, சாபவிமோசனம் பெறுவாய்" என்று அவளுக்கு அவளது கணவன் சாபவிமோசனம் கொடுத்திருந்தான்.

அவள், புலிப்பால் தேடி காட்டுக்கு வந்த மணிகண்டனுடன் அழுதா நதிக்கரையில் போர் புரிந்தாள். மணிகண்டனால் கொல்லப்பட்ட பிறகு அவள் தனது சுய உருவத்தை அடைந்து, சாபவிமோசனம் பெற்றாள். மணிகண்டன் அழகில் மயங்கிய அவள், மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றாள். அதற்கு அவர், "நான் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் செய்து முடித்த பிறகு உன்னை மணக்கிறேன்" என்கிறார்.

தொடர்ந்து, புலிப்பால் பெற சென்ற அவருக்கு, தேவர்களே புலிகளாக மாறி காட்சி தந்தனர். அந்த புலிகளில் ஒன்றில் மணிகண்டன் ஏறி அமர்ந்து கொள்ள, மற்ற புலிகள் புடைசூழ அரண்மனைக்கு வந்தார். மணிகண்டனின் மகிமையை உணர்ந்த மகாராணியும், அமைச்சரும் திருந்தினர். புலிகளாக வந்த தேவர்கள் தங்கள் சுய உருவத்திற்கு மாறினர்.

தனது பிறப்பு உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்த மணிகண்டன், தான் வந்த வேலை முடிந்து விட்டதாகவும், தான் போவதாகவும் கூறிவிட்டு செல்ல முயன்றார். அப்போது, பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன், "மீண்டும் உன்னை நான் எப்போது பார்க்க முடியும்?" என்று கேட்கிறார்.

அதற்கு மணிகண்டன், மகர சங்கராந்தி அன்று (தை 1-ம் தேதி) தான் ஜோதி வடிவில் எல்லோருக்கும் காட்சித் தருவதாகவும், தான் எய்தும் அம்பு எங்கே போய் நிற்கிறதோ, அங்கே தனக்கு ஒரு வாசஸ்தலம் கட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் எய்த அம்பு பம்பை நதிக்கரையில் நின்றது. அங்கு கோவில் எழுப்பப்பட்டது.


அதன்படி அமைந்தது தான் இன்றுள்ள சபரிமலை அய்யப்பன் கோவில். இங்குள்ள அய்யப்பன் விக்ரகத்தை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் யோக சின் முத்திரை தாங்கிய கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் அய்யப்பன்.

அவரை மணந்துகொள்ள விரும்பிய மகிஷி, மாளிகைபுரத்து அம்மனாக, அவருக்கு இடது பக்கத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இன்றுவரையிலும் அவள் அய்யப்பனுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment