Tuesday 31 July 2012

இராகு.

 

Picture


8. ராகு இராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும். அகப்பட்ட கிரகம் வலுவிழந்துவிடும். சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார்.        

                                        இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி. சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார். இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார். பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம். இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.       

                                        சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்ட போது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி. தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். ராகு பகவானை வழிபட ஏற்ற தலம் திருநாகேஸ்வரம். இங்கு சென்று மந்தார மலர் மாலையிட்டு, கருப்பு ஆடைதானம் செய்து உளுந்தினால் செய்த பலகாரத்தை ராகு பகவானுக்கு நிவேதிக்க வேண்டும். இதனால் ராகுதோஷம் நீங்கும்.      

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.      

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்.நாகேஸ்வரர், நாகநாதர்
உற்சவர்
அம்மன்/தாயார்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)
தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:சூரியதீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநாகேச்சுரம்
ஊர்:திருநாகேஸ்வரம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சுந்தரர்
தேவாரப்பதிகம்
அரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு
கவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும்
வரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. -சுந்தரர்       

                        தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.      

இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் - 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.      

பிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.      

ராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.      

முத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.      

ராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் "நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் "மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.      

தோஷ பரிகாரம்:இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.      

ராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.      

சிறப்பம்சம்:கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், "யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.      

தல வரலாறு:சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்.      

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.
நிறம்-கருப்பு
மலர்-மந்தாரை
வாகனம்-ஆடு
ஆட்சி-இல்லை
உச்சம்-விருச்சகம்
நீசம்-ரிஷபம்
நட்சத்திரங்கள்-திருவாதிரை,சுவாதி,சதயம்
பால்-பெண்
கோசார காலம்-1 1/2 வருடம்
நட்பு-சனி,சுக்கிரன்
பகை-சூரியன்,சந்திரன்,செவ்வாய்
சமம்-புதன்,குரு
உலோகம்-கருங்கல்             

ராகு 1 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.      

ராகு 2 ஆம் வீட்டில் இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.      

ராகு 3 ஆம் வீட்டில் இருந்தால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும்.

ராகு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
      
ராகு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.      

ராகு 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும்.      

ராகு 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.      

ராகு 8 ஆம் வீட்டில் இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

ராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. 
     
ராகு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.      

ராகு 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.      

ராகு 12 ஆம் வீட்டில் இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.             

ராகு (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment