Tuesday 31 July 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர்


குறித்திட்டேன் கன்னியிலே உதித்தபேர்க்கு
குற்றம்வந்து நேருமடா குருவினாலே
பரித்திட்டேன் பண்டுபொருள் நிலமும்சேதம்
பகருகின்ற குருபதியும் கோணமேற
சிரித்திட்டேன் சென்மனுக்கு வேட்டலுண்டு
செந்திருமால் தேவியுமே பதியில் வாழும்
குறித்ததொரு மனை தனிலே தெய்வமுண்டு
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே


கன்னியா லக்கினத்தில் உதித்த பேர்க்குக் குருவினால் வெகு துன்பம் வாய்த்திடுதல் உண்மையேயாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வர். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணியாகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.

இப்பாடலில் கன்னி இலக்கின ஜாதகர் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment