நாற்றம் பிடித்தவள் என
நல்லவரெனத் தங்களை
சொல்லிக் கொள்பவர்கள்
சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்-அவளை
வாசம் பிடிக்க வருபவர்கள்
வரிசையாய் வந்து கொண்டேயிருக்கிறார்கள்..
ஈருடலும்
சந்தோஷிக்கவேண்டிய
சம்பிரதாயம்தான் அது..
ஓருடல் சந்தோஷிக்கிறதா
எனத் தெரியவில்லை..
சம்பிரதாயம்
சதா நடந்து கொண்டேயிருக்கிறது-அந்த
சம்பிரதாயமே சம்பாதித்துக் கொடுக்கிறது..
வியர்வை சிந்தி உழைக்கும் பணமே
உண்ணும் உணவை செரிக்கும்
என்பதென்னவோ அவளுக்கும்
தெரிந்திருக்கிறது..
தன் உடலில் சிந்திய வியர்வையைப் பார்த்து
நானும் உழைத்திருக்கிறேன் என்று
உறுதியாக நம்பிக் கொள்கிறாள்..
உடல் சிந்திய வியர்வையா..
உடல் சிந்திய கண்ணீரா..
அவளுக்கே வெளிச்சம்..
உடலது பலமுறை
சந்தோசிக்கிறது..
மனமது ஒருமுறையாவது
சந்தோஷிக்கிறதா?!..
வினாக்குறியும்
ஆச்சர்யக்குறியும் இங்கே
ஜோடி சேர்ந்து நிற்கின்றன..
உண்டான ஊதியத்தை
சரியாகக் கொடுக்கும் சுகவாசி,
அதன்மூலம் தானொரு
யோக்கியன் என நிரூபிக்கிறான்..
இல்லாளை விடுத்து
அடுத்தாளை அடைபவன்
அயோக்கியன் எனத் தெரிந்தும்
தெரியாததைப் போலவே காட்டிக்கொள்கிறான்..
அவளைப் போற்றும் வாடிக்கையாளன்
அவள் பெயர் சொல்லி
செல்லமாய் அழைத்தாலும்
அவளைத் தூற்றும் வாடிக்கையாளன்
பல பெயர்களைச் சூட்டியிருக்கிறான்..
பல பெயர்களுக்கு சொந்தக்காரி..
உடலை கட்டிலில் கிடத்திவிட்டு
பாவப்பட்ட மனமது
எங்கேயோ போய்விடுகிறது..
ஓருடல் ஓருடலை
உதறித் தள்ளிய பிறகே
மனமது கூடு திரும்புகிறது..
அதற்கென உண்டாக்கப்பட்ட
இயந்திரமாகத்தான் உடலது
இயங்கிக் கொண்டிருக்கிறது..
ஆற்றல் தீரும் வரை
இயந்திரம் இயங்கத்தான் செய்யும்..
வயிற்றுப் பசிபோக்க- பலரின்
உடற்பசியைத் தீர்க்க வேண்டிய கட்டாயம்..
குடும்ப சுமை இறக்க-பல
குடும்பத் தலைவர்களை
சுமக்க வேண்டிய நிர்பந்தம்..
ஆடம்பர வாழ்க்கைக்கு
அடித்தளம் அமைக்கத் தன்னையே
அடித்தளமாக்கிக்கொள்கிற அவலம்..
இன்னும் பல தலைப்புக்களில்
இது பலவகைப்படுகிறது..
இளமை முதுமையோடும்
முதுமை இளமையோடும்
கூட்டணி அமைக்கிறது..
புணர்ச்சி விதி
இங்கே தவறாகிப் போகிறது..
இதுவும் ஒரு பிழைப்பா
என யாரும் கேட்டுவிட முடியாது..
சமூகம் பாலியல் தொழில் என்றே
இதனை வகைப்படுத்துகிறது..
No comments:
Post a Comment