ஒரு மலரின் சுவாசம்
எப்பொழுதும் உஷ்ணம் மட்டுமே
யாசிக்கும் இந்த தேகத்தில்
முதல் முறை
ஒரு மலரின் சுவாசம்
மெல்லத் தீண்டி செல்கிறது .!
உன்னை நேசித்தக் கணங்கள்
ஞாபகத்தில் இல்லை
ஆனால் தினம் சுவாசிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உந்தன் ஞாபகங்கள் நிரம்பி வழிகிறது !
உந்தன் முகம் பார்க்காத உரையாடல்கள்
பல கற்பனைகளை
விதைத்து செல்கிறது
என் எண்ணப் பெருவெளிகள் எங்கும் !
பூக்களின் புன்னகை ரசிக்க
உன் சிரிப்பு..!
குயிலின் குரல் ரசிக்க
உனது பேச்சு..!
மதுவுண்ட போதை உணர
உந்தன் பார்வை..!
நீண்ட தூரங்கள் கடக்க
உன் நினைவுகள்..!
ஆயிரம் கவிதைகள் கிறுக்க
உந்தன் சில நொடி வெட்கம்..!
ஒரு நொடியில்
என்னை கொலை செய்ய
உந்தன் அரை நொடி மவுனம்...!
வீட்டின் கூரை
முழுவதும் நமக்காய் ஒரு வானம்..!
தலை நனைக்கும் எப்போதும்
தலை துவட்ட உந்தன் முந்தானை..!
நீ பரிமாறி
நான் உண்ட பின்
கை கழுவ பக்கத்தில் கடல்..!
மேகங்களெல்லாம் ஊஞ்சல் கட்டி விளையாட
உந்தன் ஓரிரு கூந்தல் முடி !
உன்னை வாசித்து முடிக்க
மூக்குத்தி வெளிச்சம்..!
நாம் முத்தமிட ஒரு குழந்தை
நம்மை முத்தமிட ஒரு நிலவு..!
விண்மீன்கள் பறிக்க
துணைக்கு உந்தன் விரல்கள்..!
தாலாட்ட தென்றல்
தலை கோத
உன் விரல்கள்
தலையணைக்கு உன் மடி...!
இந்த உலகம் மறக்க
எப்போதும்
என் அருகில் நீ...!!
No comments:
Post a Comment