Tuesday 24 July 2012

மழலை மதி


பிஞ்சு விரல்களிடை

சொக்கித்தேன்-இவள்

கொஞ்சும்

மொழிகளிடைக்

கொம்புத்தேன் ...


துள்ளிய பாதங்களிடை

எனை மறந்து

கலந்தேன்

தொடர்ந்தேன்

இவள் மின்னும்

கண்களிடை ஒளியாகிக்

கவிழ்ந்தேன்


குழந்தையும்

தெய்வமும் ஒன்றாமே

இறைவா

நீ இத்தனை அழகா?

 
மறந்தேன்

எனை மழலையாய்

உணர்ந்தேன்

பரிசுத்த பற்சிரிப்பில்

கறை எண்ணம்

கழுவித் தெளிந்தேன் ...!!!

 
புத்துயிர் கொண்டு

இவளை அணைத்தேன்

புது ஆன்மாவை

எனக்குள்

தெளித்தேன்

அமிர்தாய்த் துளித்தேன்

ஆனந்தமாய்

அழுதேன் ...!!!

 
கடவுளானேன்

கவிஞனானேன்

மென்மை உலகு

அழகிய கனவு

இவள்

விளையாட்டில் நான்

பொம்மையானேன்

விந்தையானேன்

 
தொப்புள்கொடி

உறவாய்த் துளிர்த்தது

இவள் ஜோதி

தொட்டிலிலே நிலவாய்

ஜொலித்தது

இன்னும் என்ன செய்வேன்


இவள்

பஞ்சுக் கரங்களிடைப்

பதுங்கிச்

சொர்க்கம் காண்பேன்..!!

No comments:

Post a Comment