Monday 2 July 2012

இறுதி வாழ்த்து!


பரந்த புல்வெளியில் காரிருளில்
வானத்தை பார்த்தவாறு
என்னருகில் நீயும் உன்னருகில் நானும்
மல்லாந்து படுத்திருந்து
வானில் மின்னிய தோரணங்களை பார்த்தவாறு
பேசிய காதல் கதைகள் அன்பே....!

நிலவறியும் அந்த கருமுகில் அறியும்
இரவறியும் அந்த புல்வெளியறியும்
நீயும் அறிவாய் நானும் அறிவேன் கண்ணே...!

அன்று வானமே அழிந்தாலும்
நம் காதல் அழியாது என்று வசனம்
பேசிய நீயா இன்று
எனை மறந்து போ என்கிறாய் நொடியில்...

மறந்திடலாம் உன்னை
நான் மறக்கட்டையாய் இருந்திருந்தால்
பிரிந்திருப்பேன் உன்னை
நான் பிறவி எடுக்காதிருந்திருந்தால்....

உன் விருப்பம் நிறைவேற்ற
என் உயிரும் தருவேனே அன்பே! - ஆனால்
என் உயிரினும் மேலான உன் நினைவை
நீ அல்லவா கேட்கிறாய்!

அதை எப்படி உன்னிடம் நான் தருவது இப்போது....
ஏற்கனவே அது உன்னால் களவாடப்பட்டு விட்டதடி
தற்போது மீதமிருப்பது இந்த பிண்டம் மட்டுமே

மீதமிருக்கும் இந்த பிண்டத்தை
உன் திருமண வேள்வித் தீயில்
ஆகுதியாகவாவது சேர்த்துக்கொள்
உன் வாழ்வு வளம் பெற என் இறுதி காணிக்கையாக.....
என் இறுதி வாழ்த்தாக........!

No comments:

Post a Comment