Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 253 - புதன் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்


பாரப்பா புதன் திசையில் சுக்கிரபுத்தி
பாங்குள்ள மாதமது முப்பத்தினாலு
சேரப்பா அதன் பலனைச் செப்பக்கேளு
தேவதையால் தர்க்கமது தீதாம்பாரு
ஆரப்பா மனைவியுடன் புத்திரனும்
அனுதினமும் வாழ்ந்திருப்பன் அலங்காரமுடன்
காரப்பா கனகமது கனசம்பத்துண்டாம்
கனமான ராசாவால் கடாட்ச முண்டாங்கேளே


புதமகா திசையில் சுக்கிர பகவான் புத்தி 2 வருடம் 10 மாதங்களாகும். தனது ஆதிக்க காலத்தில் சுக்கிரபகவான் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! தேவதை கோபத்தால் குடும்பத்தில் தர்க்கம் ஏற்படும். இது தீமையானதே எனினும் மனைவி மக்களுடன் அன்யோன்யமான வசியமுடன் இச்சாதகன் அலங்காரமுடன் வாழ்ந்திருப்பான். பொன்னாபரணச் சேர்க்கை உண்டாகும். வாகனயோகம் ஏற்படும். பெருமைமிக்க அரசரின் கருணையும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறும் இக்கருத்தைக் கவனமாகக் கேட்பாயாக!

இப்பாடலில் புதன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment