Saturday 25 August 2012

ரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்



ரிஷபம்(கிருத்திகை 2,3,4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதம்)

ரிஷப ராசியின் அதிபதி ஸ்ரீமகா சுக்கிர பகவானாவார். ரிஷப ராசி ஸ்திர ராசியாகும். வெண்மை நிறம் கொண்ட ரிஷபராசியின் அதிபதி சுக்கிரன். குருவுக்கு அடுத்தபடியான முழு சுபராவார். ரிஷப ராசி பெண் ராசியாகும். நீரின் தத்துவத்தை கொண்டதாகையால் சீதள சுபாவம் இருக்கும். ரிஷ ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். மற்றவை பகை ராசிகளாகவும் இருக்கின்றன. கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்களில்பிறந்தவர்கள் ரிஷப ராசிகாரர்களாவார்கள்.

உடலமைப்பு,

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தக்கூடிய அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டவர்கள் என்றாலும் கம்பீரமான தோற்றம் இருக்கும். நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும, அழகான அங்க அமைப்புகளால் அமைந்திருக்கும். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் புகழ், கௌரவம், அந்தஸ்து யாவும் அமையும்.

குண அமைப்பு,

ரிஷப ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், கவர்ச்சியாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள் என்றாலும் பழக்கமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும், புதிதாக பழக்க மேற்படுத்திக் கொள்வதில் சற்று சங்கடப் படுவார்கள். வார்த்தைகளை அளந்து பேசும் இவர்களின் பேச்சில் உறுதி காணப்பட்டாலும் பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசி பிறர் தம் பேச்சை வெல்ல இடம் தரமாட்டாமல் பேச்சில் தனக்ஙகென தனி பாணியை வைத்திருப்பார்கள். நல்ல ஞாபக சக்தி கொண்டவர்கள். தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாதவர்கள். ஆதலால் எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றுவார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிப்பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவர்களுக்கு பொருந்தும். எவருக்கும் எளிதில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆடம்பரமாக இல்லா விட்டாலும் சுத்தமான உடைகளை உடுத்தவே ஆசைப்படுவார்கள். வெண்மை நிறம் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குதர்க்கமாகவும்,பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவார்கள். எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மையும் அதிகமிருக்கும்.

மணவாழ்க்கை,

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதிலிருந்தே குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிற்றின்ப பிரியர்களாக இருப்பார்கள். திருமண பிராப்தம் சற்று தாமதமானாலும் மனைவி அடக்கமுள்ளவளாக இருப்பதால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். மனைவி வழியில் வீண் விரயங்களும், கடன்களும் ஏற்படும். திருமணமாகாவிட்டாலும் மாதர்களின் சேர்க்கைகள் இருக்கும். தேவையற்ற பெண் சகவாசங்களை தவிர்த்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

பொருளாதார நிலை,

தாராளமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு தன வரவுகள் தாரளமாக இருக்கும். இளம் வயதில் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும், வளர வளர தனது சொந்த முயற்சியாலோயே தனக்கேற்ற பணத் தேவைகளை சரி செய்து கொள்வார். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாதலால் அதனால் சில கடன்களை சந்திப்பார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள், சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, எதிர்பாராத திடீர் தன வரவுகளால் உயர்வுகள் போன்றவை உண்டாகும். எதையும் புதிதாகத்தான் வாங்குவார்கள்.

புத்திர பாக்கியம்,

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற்றால் புத்திர பாக்கியம் சற்று தாமதமாகத்தான் அமையும். அதிலும் இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளால் வீண் கவலைகளும், தொல்லைகளும், செலவுகளும் ஏற்படுமே தவிர அனுகூலப்பலனை அடைய முடியாது. அதுவே பெண்குழந்தைகளாக இருந்தால் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களை பெற முடியும். பிற்காலத்தில் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.

தொழில்,

ரிஷப ராசியில் பிறந்த ஜாதகர் சிறு வயதிலிருந்தே சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்து படிப்படியாக உயர்ந்து விடுவார். கலைத் துறை, இசைத் துறை போன்றவற்றில் ஆர்வமும், நவீன தொழில்களில் லாபமும் கிட்டும். பத்திரிகை துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அடிமைத் தொழில்செய்வதை அறவே விரும்ப மாட்டார்கள். கூட்டாளிகளை நம்பி எந்தவொரு செயலையும் ஒப்படைக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சில நேரங்களில் அலைச்சல் களும் அதிகரிக்கும். பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிபதியாகலாம். சினிமா தியேட்டர் வாங்கலாம். ஜவுளிக் கடை, நகைகடை, பால் பண்ணை வைக்கும் வியாபாரம் போன்றவற்றிலும் லாபம் கிட்டும். பெண்கள் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் மற்றும் பூமி,மனை போன்றவற்றை வாங்கி விற்கும் தொழில், பணம், கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் லாபம் யாவும் சிறப்பாக அமையும் என்றாலும் கூட்டாளிகளை நம்பி எதையும் ஒப்படைப்பதில் மிகவும் எச்சரிக்கை தேவை.

உணவு வகைகள்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பயிறு வகைகள், கேரட்,பசலை கீரை,கிழங்கு வகைகள் வெள்ளரிக்காய்,சிவப்பு ழுள்ளங்கி,சீஸ்,ஆப்பிள்,பாதாம்,தேங்காய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்வர்கள் இனிப்பு வகைகளை தவிர்ப்பதால் நீரழவு நோய்கள் உண்டாவதை தவிர்க்கலாம்

அதிர்ஷ்டம் அளிப்பை

எண் - 5,6,8,14,15,17
நிறம் - வெண்மை, நீலம்
கிழமை- வெள்ளி, சனி
கல்-வைரம்
திசை - தென்கிழக்கு
தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி

No comments:

Post a Comment