Saturday 25 August 2012

மாளவிகா யோகம்



அசுர குரு என வர்ணிக்கப்படம் சுக்கிரன், ரிஷபம், துலாத்தில் ஆட்சி பெறுகிறது. மீனத்தில் உச்சம் பெறுகிறது. சுப கிரகமான சுக்கிரன் சுகக்காரகன் என்பதால் யோகத்தை அளிக்கக் கூடிய கிரகம் என எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நடைமுறையில் பார்த்தால் ஒருபுறம் நல்லதை செய்தாலும் ஒருபுறம் கெடுதலை செய்து விடுகிறது
.
பொதுவாக சுக்கிரன் பலரது ஜாதகத்தில் வலிமை பெறாது, குறிப்பாக சுக்கிரன், சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் சில நேரங்களில் அஸ்தமனம் அடைந்து விடுவார். சுக்கிரன் இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் ஏதாவது ஒரு வகையில் கெடுதலை செய்து விடுவார்.
 
சுக்கிரன் பகவான் தனது லக்னமான ரிஷபம், துலாத்தில் பிறந்தவர்களுக்கும் புதன், சனி லக்னமாக ரிஷபம், கன்னி, மகரம், கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்குத்தான் அத்கப்படியான நற்பலன்களை வழங்குகிறார். சுக்கிர பகவான் மற்ற கிரகங்களுடன் சேருகின்ற போது யோகங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் சுக்கிரன், கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது பஞ்சமகா புருஷ யோகத்தில் சிறந்த யோகமான மாளவிகா யோகத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. மற்ற எந்த யோகத்திற்கு இச்சிறப்பு இல்லை.
 
உதாரணமாக மேஷ லக்னத்திற்கு 7ல் ஆட்சி பெறும் பொழுது ரிஷபத்திற்கு லக்னத்திலும், மிதுனத்திலும் 10ல் உச்சம் பெற்றும் கடகத்திற்கு 4ல் ஆட்சி பெற்றும் சிம்மத்திற்கு 10லும் கன்னிக்கு 7லும் துலாத்திற்கு லக்னத்திலும், விருச்சிகத்திற்கு 7லும் தனுசுக்கு 4லும், மகரத்திற்கு 10லும், கும்பத்திற்கு 4லும் மீனத்திற்கு லக்னத்திலும் அமைகின்ற பொழுது மாளவிகா யோகம் உண்டாகும். குறிப்பாக அசுர குருவான சுக்கிரன் தனது நட்பு கிரகமான புதன், சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், புதன், சனி வீட்டில் சுக்கிரன் அமையப் பெற்றாலும் சுக்கிர திசையில் நற்பலனை வழங்குவார். குறிப்பாக சுக்கிர பகவான் திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெறுகின்ற பொழுது யோகப் பலன் வலுவாக வழங்குவார்.

கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் சிறிது அனுகூலமற்ற பலனுடன் ஏற்றமிகு பலனை வழங்குவார்.
 
களத்திர காரகன் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றோ சுபர் பார்வையின்றி பாவிகள் சேர்க்கையுடன் இருந்தாலோ நற்பலனை வழங்க இடையூறுகள் உண்டாகும். குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து செவ்வாய் ராகு போன்ற கிரகங்கள் சேர்க்கைப் பெற்றால் பெண் விஷயத்தில் அவப் பெயரை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும்.

No comments:

Post a Comment