Monday 27 August 2012

குழந்தையை முழு உருவமாக பெற்றெடுக்கும் தாய்மை



தாய்மை

மானிடராய் பிறப்பதற்கே இம்மண்ணில் மாதவம் செய்திடல் வேண்டும். இதில் குறிப்பாக பெண்கள் இந்நாட்டின் கண்களாக கருதப்படுகிறார்கள். பெண்மை என்ற சொல்லுக்கே மென்மை என்று தானே பொருள். பெண்ணுக்குள் பல மென்மைகள் இருப்பதால்தான் இயற்கையும் அவளுக்கு தாய்மை அடையும் பாக்கியத்தை அளித்திருக்கிறது.

ஓர் உயிரணுவை கருவாக்கி, தன் கருவறையில் சுமந்து, தான் உண்ணும் உணவையே அந்த உயிருக்கும் அளித்து, பத்து மாதங்கள் வரை பாதுகாத்து, ஒரு குழந்தையை முழு உருவமாக பெற்றெடுக்கும் பெருமை தாய்மைக்குத்தான் உண்டு. அதற்காக அவள் படும்பாடுகள் அனைத்தும் அந்த ஜீவனின் முகத்தை பார்த்தவுடன் பறந்து விடுகின்றது. தாய்மை என்ற ஒன்று பெண்ணிற்கு இல்லை என்றால், அவள் மலடியாக கருதப்பட்டு ஒரு வாரிசு பெற்றெடுக்க முடியாதவள் என்ற பட்டத்தோடு இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படுகிறாள்.

ஒரு பெண்ணை முழுமையானவளாகவும், மணவாழ்க்கை ஏற்றவளாகவும் மாற்றுவது குழந்தை பாக்கியமே. எவ்வளவு பொன், பொருள், செல்வங்கள் இருந்தாலும், திருமணமான பெண்ணைப் பார்த்தால் எத்தனை குழந்தைகள் உள்ளன என கேட்பார்களே தவிர, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என கேட்க மாட்டார்கள்.

பாமரர் முதல் பணக்காரர் வரை தமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இருப்பதை பெருமையாக கருதுகிறார்கள். இப்படி பெண்ணிற்கு தாய்மையடையும் பாக்கியம் உண்டாவதைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒருவரின் ஜனன ஜாதக ரீதியாக 5ம் பாவம் புத்திர ஸ்தானம் என்றாலும், பெண்களுக்கு 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களில் குரு பகவான் புத்திர காரகனாக கருதப்படுகிறார்.

எனவே, பெண்களுக்கு 5ம் பாவமும் 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும், புத்திர காரகன் குருவும் பலமாக அமைந்துவிட்டால் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுக்கும் யோகமும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 5,9 க்கு அதிபதிகள் ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான தாய்மை யோகம் உண்டாவது மட்டுமின்றி புத்திர காரகன் குருவும் பலம் பெற்று 5,9ம் பாவத்தையோ 5,9 ம் அதிபதிகளையோ பார்வை செய்தால் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் பெண்ணிற்கு உண்டாகிறது. 5,9 ம்வீடுகள் சுபக்கிரகங்களின் வீடாக இருந்து சுப பார்வை பெறுவது நல்லது. 5,9 ம் அதிபதிகள் பாவியாக இருந்தாலும், வலுப்பெற்று அமைந்து சுப பார்வை பெறுவதாலும் சிறப்பான தாய்மை பாக்கியத்தை உண்டாக்கும்.

ஆண்குழந்தை பாக்கியம்

குறிப்பாக, ஆண்குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் யாருக்கு அமைகிறது என பார்த்தால், நவக்கிரகங்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் 5,9 ல் இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் அழகான ஆண் குழந்தை யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் 5,9 க்கு அதிபதிகள் பலமாக அமைந்திருந்தால் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பெண் குழந்தை யோகம்

பெண் குழந்தை என்றாலே கருவிலேயே கலைத்து விடக்கூடிய அவலநிலையும், கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் சூழ்நிலைகளும் மாறி ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை உண்டாகி உள்ளதால், பெண் குழந்தைகளைபெற்றெடுக்கும் யோகம் யாருக்கு என பார்க்கின்ற போது, நவகிரகங்களில் பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், சுக்கிரன் ஆகியவை 5,9 ல் வலுவாக அமைந்தாலும், 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும் அழகிய பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல 5,9 க்கு அதிபதிகள் ரிஷபம், துலாம், கடகம் ஆகிய பெண்கிரக வீடுகளில் இருந்தாலும் சிறப்பான பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

ஒரு பெண்ணானவள் தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம் அவள் மறு ஜென்மம் எடுப்பதாகவே கருதப் படுகிறாள். பிரசவம் என்பது சுலபமாக இருந்தால்தான் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க முடியும். அதுவே பிரசவம் சுலபமாக இல்லையென்றால் பெண்ணுக்கும் பிரச்சினை, பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சினையாக அமைந்து விடுகின்றது. இப்படி பல கஷ்டங்களையும் தாண்டி மென்மையான பெண்மை தாய்மையை அடைகிறது. அதனால் பெண்மையே புனிதமாகிறது.

No comments:

Post a Comment