Thursday 20 September 2012

அவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு. சந்தர்ப்பம், சூழ்நிலை என்று இயற்கையின் இழுப்பில் நாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும், நமக்கே நமக்கு என்று - சில அபூர்வமான வேளை வருவதும் உண்டு. அப்போது நாம் தேமே என்று வாழ்க்கையின் ஓட்டத்திலேயே ஓடாமல், லபக்குன்னு புடிச்சா ஆச்சு... இல்லை , காலம் முழுக்க புலம்பிக்கிட்டே திரிய வேண்டியது தான்..

எந்த நேரம் நல்ல நேரம் , எந்த நேரம் மோசமான நேரம் என்று அறிந்து கொண்டு, அதை பயன்படுத்த தெரிந்தாலே போதும்.. வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இன்னைக்கு பார்க்க விருப்பது - இரண்டு அபூர்வ நாட்களைப் பற்றி...

பொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்த உணவு என்று இல்லை - நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...

பெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..?

மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ...

எங்கள் ஊரில் கிரகண நேரத்தில் - உலக்கையை நிற்க வைப்பார்கள். கொட்டுக்கூடை என்று சிறிய வெண்கலப் பாத்திரம் ஒன்று இருக்கும். அதில் நல்லெண்ணையை ஊற்றி - உலக்கையை நிறுத்தி வைப்பார்கள். கிரகண நேரத்தில் அந்த உலக்கை அப்படியே நெட்டுக் குத்தாக நிற்கும். மற்ற நேரங்களில் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. சிறிய வயதில் , எங்கள் கிராமத்தில் நானே பல தடவை பார்த்து இருக்கிறேன்... (கொட்டுக் கூடையை விடுங்க... உலக்கையே இப்போ இருக்கிற தலை முறைக்கு தெரியுமான்னு தெரியலை...)

கர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...

கிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...!
சரி , இது எல்லாம் இன்னைக்கு எதுக்கு சொல்றேன்னு கேட்குறீங்களா?
இன்றைக்கு சந்திர கிரகணம்....

இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும். முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும்.

சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று , இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

கிரஹண தோஷ பரிகார ஸ்லோகம் :
இந்த்ரோ[அ]நலோ தண்டதரஸ்ச ருக்ஷ:பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:

குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.
===============================================

இந்த கிரகண நேரத்தில் - மந்திர ஜெபம் செய்வது மிக மிக உகந்தது. உங்களுக்கு அது அளப்பரிய பல நற்பலன்களை தரும்....

ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கும் , ஜெபித்து இடையில் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து ஜெபிக்க முடியாமல் போனவர்கள் - இன்றைய கிரகண நேரத்தை அவசியம் பயன் படுத்திக் கொள்ளுங்கள்....

சனிக்கிழமை , வீக் எண்ட் ... ஒஸ்தி மாமூ.....ன்னு , வழக்கம் போல செய்ற பார்ட்டி சமாச்சார வேலைகளை எல்லாம் , இன்னைக்கு செய்யாம இருக்கிறது , கறி மீன் சாப்பிடாம இருப்பது - சாலச் சிறந்தது..

வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்...!

======================================================

இன்னொரு சிறப்பான ஆலயத்தை இன்று பார்க்க விருக்கிறோம்....

நாள் தவறாமல் அகத்தியர் பெருமானால் பூஜை செய்யப்படும் முருகன் - இந்த
கழுகாசல மூர்த்தி.

அப்படி என்ன விசேஷம் இங்கே...?

ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். ராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார. இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு மக முனிவர், ராமனிடம், தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே, இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது ? என்றார்.

அதற்கு ராமன், நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்,’’ என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார். அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

முருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு திர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை’ என பெயர் பெற்றது.

எனவே இந்த மலையும் , ஆலயமும் - ராமாயண கால தொடர்புடையது.

பிரார்த்தனை :திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான் இந்த குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.

இந்த கழுகாசலமூர்த்திக்கு முகம் ஒன்று, கரம் ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை ‌தொங்க விட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார். மயிலாக மாறிய இந்திரன் : பிற கோயில்களின் அசுரன் தான் மயிலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும்.

ஆனால், இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகனும் (‌செவ்வாய்) இருப்பது சிறப்பு. எனவே குரு மங்கள ஸ்தலம்’ என்கிறார்கள். இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிசிறப்பாகும்.

 

No comments:

Post a Comment