Sunday 12 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 256 - புதன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்


சேரலாம் புதன் திசையில் செவ்வாய்புத்தி
செயமில்லா மாதம் பதினொன்றாகும்
தேரலாம் நாளதுவு மிருபத்தேழில்
தெரிவையர்கள் தன்னாலே கிரந்தியதுநோவாம்
மாரலாம் சத்துருவால் மயக்கமுடன்பேயும்
மனதான சகோதரமும் அதனால் சேதம்
பாரலாம் பலநிதியுங் கெடுதிகாணும்
பணமுடைய பூமிமுதல் பலனுந்தீதாம்


இந்த புதமகா திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் வெற்றியினைத் தராத 11 மாதம் 27 நாள்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பெண்களால் கிரந்தி முதலிய ரோகங்களைப் பெறுவான். சத்துரு உபாதையுண்டாகும், அதனால் மனத்தில் பீடியும் மயக்கமும் உண்டாகும். நோயுபாதையால் மனமுடைய சகோதரமும் நஷ்டமடையும். பலவகைச் செல்வமும் பங்கப்படும். வெகுதனம் நல்கும் பூமியும் விளைச்சல் குன்றி துர்ப்பலனே தரும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment