Monday 6 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 129




கூறே நீ கொடியோர்கள் ராசியாதி
கொற்றவனே கூடினால் கொடுமைமெத்த
யேரேநீ ராஜபயம் பொருளுஞ்சேதம்
யிடாதோஷம் பிணிகண்டம் களவும் போகும்
சீரேநீ சந்திரனும் கண்ணுற்றாலும்
செம்பொன்னும் கிட்டுமடா ஜென்மனுக்கு
வீரேநீ போகருட கடாட்சத்தாலே
வினைப்பயனைப் புலிப்பாணி விரித்தேன்பாரே


இன்னுமொரு கருத்தையும் நீ கூறுவாயாக! இராசி நாதன் கொடிய கோள்களைக் கூடினால், அதனால் கொடுமை மிகவும் விளையும் என்பதையும் அறிக. அவ்வாறு கூடினால் அரச பயமும் அதனால் வெகுதன விரயமும், பலவிதத் துன்பங்களும், பெண்களால் தோஷமும் நோயும், கண்டமும் மனையில் களவு போதலும் நேரும். ஆயினும் வளர்பிறைச் சந்திரனின் நோக்க முற்றால் சிறந்த செம்பொன் கிட்டுதலும் உண்டாம் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.

No comments:

Post a Comment