Wednesday 8 August 2012

திருவாதிரை, புனர்பூசத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?


இருபத்தேழு நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற இறைவனுக்குரிய அடைமொழியோடு கூடிய நட்சத்திரங்கள் இரண்டுதான். ஒன்று திருவாதிரை; மற்றொன்று திருவோணம். திருவாதிரையில் பிறந்த குழந்தைகள் சூட்சும புத்தியோடும், அதீத நுண்ணறிவோடும் இருப்பார்கள். ‘‘இந்த வயசுலயே எப்படி பெரிய மனுஷன் மாதிரி பேசறான் பார்த்தீங்களா’’ என்று வியக்க வைப்பார்கள். நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு வருவதால் எந்தப் பொருளை எடுத்தாலும் பிரித்துப் பார்த்து மறுபடியும் இணைக்க முயற்சிப்பார்கள். ஐந்து வயதிலேயே பத்து வயதுக்கான முதிர்ச்சி இருக்கும். வகுப்பறையில் ஆசிரியரிடம் எந்தக் கேள்வியையும் தயங்காது கேட்பார்கள். ஆனால், திடீரென்று காரணமே இல்லாது மூட் அவுட் ஆகி விடுவதும் உண்டு.

முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 15 வயது வரை ராகு தசை நடக்கும். இவர்களின் சொந்த ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால், பள்ளியிலேயே முதன்மையாக வருவார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆறாம் வகுப்பிற்குப் பிறகு எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் திட்டமிடத் தொடங்குவார்கள். வேறு பள்ளிக்கு மாற்றலாமா என்றுகூட யோசிப்பார்கள். சப்ஜெக்ட்டை விட மொழியறிவு அதிகம் இருக்கும். மதிப்பெண்ணில் கூட லிமிட் வைத்திருப்பார்கள். ‘‘தொண்ணூறுமார்க் வருதா... இதுவே அதிகம்’’ என்று திருப்தி அடைவார்கள். அறிவுபூர்வமாகவும் அபத்தமாகவும் கேள்விகளைக் கேட்டபடி இருப்பார்கள்.

இந்த ராகு தசையில் சாதாரணமாகப் படித்தாலும், 16 முதல் 31 வயது வரையுள்ள குரு தசையில் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். பள்ளியில் மதிப்பெண் குறைந்தாலும், கல்லூரியில் வெளுத்துக் கட்டுவார்கள். ராகுவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் ஆராய்ச்சிக் கல்வியை விரும்புவார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும், வேலை வேண்டாம் என்று சிலர் படிப்பைத் தொடர்வார்கள். சட்டம், ஆசிரியப் பணி, ஆடிட்டர் என்று போனால் சிறப்பாக வருவீர்கள். கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர், அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவையும் ஏற்றம் தருவதாக அமையும்.


இரண்டாம் பாதத்தை மகரச் சனி ஆட்சி செய்கிறது. 12 வயது வரை ராகு தசை நடைபெறும். கிட்டத்தட்ட 4 வயது வரை குழந்தையின் உடல்நலம் குறித்து கவலைப்பட நேரும். படிப்பிலும் மெதுவாகத்தான் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு வரை நெருக்க வேண்டாம். அதன்பிறகு சிறப்பாகப் படிப்பார்கள். பள்ளிக்கல்வி முடிக்கும்முன்பே கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து விடுவார்கள். 13லிருந்து 27 வயது வரை குரு தசை வருவதால் எல்லாவற்றிலும் சிஸ்டமேட்டிக்காக மாறுவார்கள். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். வானவியல் பற்றி ஆர்வமாகப் படிப்பார்கள். பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ்கிராஃப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வையுங்கள். கனிம வளம், புவியியல் சம்பந்தமாகப் படிக்க வைத்தால் சிறப்பாக வருவார்கள். மருத்துவத்தில் ஆர்த்தோ, சரும நோய் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

மூன்றாம் பாத அன்பர்களின் அதிபதியாக கும்பச் சனி வருகிறார். ஏறக்குறைய 7 வயது வரை ராகு தசை நடக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து, பின்னர் சேர்ந்து வாழ வேண்டியிருக்கும். 8 வயதிலிருந்து 23 வயது வரை குரு தசை நடைபெறும். இந்தக் குழந்தைகள் அதிகமாக கோபப்படுவார்கள். பத்தாம் வகுப்பு வரை நன்றாகப் படித்தவர்களுக்கு, மேல்நிலை பள்ளிப் படிப்பில் கொஞ்சம் அலட்சியம் வந்து விடும். பிறகு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதல் சிறப்பாக படிக்கத் தொடங்குவார்கள். இவர்களின் நட்பு வட்டத்தை மென்மையாகக் கண்காணித்தல் நல்லது. கால்நடை மருத்துவம், விலங்கியல், தாவரவியல் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு தரும். மருத்துவத்தில் எலும்பு, நரம்பு, மயக்க மருந்து நிபுணர் போன்றவை எனில் நல்லது.
முதல் பாதத்திற்கும், 4ம் பாதத்திற்கும் அதிபதியாக குருவே வருகிறார். ஆனால் 4ம் பாதத்திற்கு அதிபதியாக மீன குரு வருவார். 1ம் பாதத்தை விட அதிர்ஷ்டக்காற்று அதிகமாக அடிக்கும். 4 வயது வரை ராகு தசை நடக்கும். ஆனால் ராகு இவர்களுக்கு யோக ராகுவாக மாறுவார். 5லிருந்து 20 வயது வரை குரு தசை வருவதால், கல்லூரி வாழ்க்கை வரை எந்தப் பிரச்னையும் இருக்காது. எட்டாம் வகுப்பு வரும்போது மட்டும் தந்தையாரின் பணி மாற்றத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ படிப்பு தடைபடுவதுபோல இருக்கும். ஆனால், சரியாகி விடும். பத்தாம் வகுப்பு தாண்டும்போதே ஐ.ஏ.எஸ். பற்றி காதில் போட்டு வையுங்கள். அலுவலக நிர்வாகம் சார்ந்த படிப்புகளை படிக்க வையுங்கள். பி.இ. படிப்பில் ஐடி, கெமிக்கல் போன்றவை ஏற்றதாகும். மருத்துவத்தில் ஈ.என்.டி, வயிறு, சிறுநீரகம் சம்பந்தமாக படித்தால் நிபுணராக விளங்கும் வாய்ப்பு அதிகம்.


திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் வருகிறார். எனவே இவர்களிடம் பொதுவாகவே ராகுவின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். ராகு பகவான் பூரணமாக இவர்களை ஆள்வதால், கூர்மையான புத்தியைப் பெற நாகராஜரை வணங்குவது நல்லது. நாகர்கோவில் தலத்தில் மூலவராகவே ஐந்து தலையுடன் நாகராஜர் அருள்பாலிக்கிறார். பிறந்ததிலிருந்து ராகு தசையின் ஆதிக்கத்தில் பல வருடங்கள் இருப்பதால், நாகராஜாவை வணங்குவது நல்லதையே செய்யும்.

புனர்பூசம்தான் மிதுன ராசியில் இடம்பெற்றுள்ள சாத்வீகமான நட்சத்திரம். நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக புதனும், முதல் பாதத்தின் அதிபதியாக செவ்வாயும் வருகிறார்கள். பொதுவாகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்றல், கற்பித்தல் என்றுதான் இருப்பார்கள். பள்ளியில் படிக்கும்போதே நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவும் செய்வார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 14 வயதுவரை குரு தசை இருக்கும். அதனால் கூச்ச சுபாவத்தோடு இருப்பார்கள். எட்டாம் வகுப்பு வரை படிப்பிலும், ஒழுக்கத்திலும் உதாரண மாணவராக விளங்குவார்கள். 15லிருந்து 33 வயது வரை சனி தசை நடக்கும். பொதுவாக இந்த ராசிக்கே சனி யோககாரகன்தான். அப்படியிருந்தும் பாதகாதிபதியாக செவ்வாய் வருவதால், படிப்பில் கவனம் சிதறும். பள்ளிப் பருவத்திலிருந்தே காவல்துறை, ராணுவம், விமானப்படை என்று பல்வேறு விதமான துறைகளை சுட்டிக்காட்டி நம்பிக்கை கொடுங்கள். எஞ்சினியரிங்கில் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் போன்றவை முன்னேற்றத்தைக் கொடுக்கும். கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனிடிக் எஞ்சினியரிங் போன்றவையும் சிறப்பே.


இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமாக இருப்பார்கள். முதல் பத்து வருடங்கள் குரு தசை நடக்கும். விளையாட்டும் இருக்கும்; விஷயமும் இருக்கும் என்பதாகத்தான் வலம் வருவார்கள். பள்ளியில் பாட்டு, நடிப்பு என வெளுத்து வாங்குவார்கள். ஏதேனும் போட்டிக்கு பெயரைக் கொடுத்தபடி இருப்பார்கள். 11 வயதிலிருந்து 29 வரை சனி தசை நடைபெறும். சனியும், இவர்களது பாதத்தின் அதிபதியான சுக்கிரனும் நெருங்கிய சிநேகிதர்கள். அதனால் மிகுந்த சுறுசுறுப்புடன் திகழ்வார்கள். கலைகளில் ஆர்வம் காட்டுவார்கள். பள்ளி முடித்ததும் திரைத்துறை சார்பான தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை தாராளமாகப் படிக்கலாம். விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் போன்றவையும் சிறந்தது. இசைக் கல்லூரியில் சேர்ந்து படித்தால், பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மூன்றாம் பாதத்தின் அதிபதியாக புதன் வருகிறார். ராசியாதிபதியாகவும் அவரே இருக்கிறார். நட்சத்திரத் தலைவர் குரு என்பதைப் பார்த்தோம். ஏறக்குறைய 6 வயது வரை குரு தசை நடப்பதால் சிறுவயதில் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கும். கிட்டத்தட்ட மூன்றாம் வகுப்பிலேயே பள்ளி மாறி படிக்கும் சூழல் உருவாகும். ஆனால், அது நல்லதாகவே அமையும். கணக்கு பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். அறிவியல்தான் கொஞ்சம் அலைக்கழிக்க வைக்கும். கிட்டத்தட்ட கல்லூரி முடியும் வரை சனி தசை நடைபெறுவதால் சிறப்பாகவே இருக்கும். புள்ளியியல், சட்டம், அக்கவுன்ட்ஸ், பொலிட்டிகல் சயின்ஸ், சி.ஏ. போன்ற படிப்புகள் சிறப்பு தரும். ஆர்க்கிடெக்ட், கம்ப்யூட்டர் அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை கிடைத்தால் விடாது படியுங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.

புனர்பூசத்தின் நான்காம் பாதத்தை சந்திரன் ஆள்கிறார். சந்திரனின் இரட்டிப்புச் சக்தி இவர்களிடம் இணைந்து இருக்கும். இதனால் சவாலான வாழ்க்கையை விரும்புவார்கள். மிதமிஞ்சிய கற்பனை வளம் இருக்கும். சிறுவயதில் தந்தை மற்றும் தாயாரை விட்டுப் பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால் இந்த நேரத்தில் ஆரண்யம், காடு என்று முடியும் தலத்திற்குச் சென்று ஈசனை வணங்க வேண்டும். உதாரணமாக வேதாரண்யம், திருவெண்காடு, திருவாலங்காடு போன்ற தலங்களில் வணங்கலாம். ஏறக்குறைய 3 வயதுவரை குரு தசை இருக்கும். பிறகு 22 வயது வரை சனி தசை நடைபெறும். 8 வயதில் கல்வியில் தடை ஏற்பட்டு, வேறு பள்ளி அல்லது ஊருக்கு செல்ல நேரும். பொருளாதார நெருக்கடியை சிறிய வயதிலேயே பார்த்து விடுவதால், கல்லூரிப் பருவத்தில் வேலைக்கும் செல்வார்கள். இவர்களுக்கு எப்போதும் மேஷம், ரிஷபம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மெரைன் எஞ்சினியரிங், ஐ.டி., மருத்துவத்தில் இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்ற துறைகளில் ஏற்றம் உண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. படிப்பில் பைனான்ஸ் போன்றவை ஏற்றது. தமிழ் இலக்கியம் படித்தால், சமூக அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரமாக வருவதாலும், செவ்வாயும் புதனும் இவர்களை திணறடிப்பதாக இருப்பதாலும் திருப்புலிவனம் எனும் தலத்திலுள்ள வியாக்ரபுரீஸ்வரரையும் சிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் தரிசித்தால் கல்வியில் மேன்மை பெறலாம். வியாக்ரபுரீஸ்வரர் எனும் குருவே புலி வடிவம் கொண்டு இத்தல ஈசனை பூஜித்திருக்கிறார். உத்திரமேரூர் - காஞ்சிபுரம் பாதையில் உத்திரமேரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

No comments:

Post a Comment