Wednesday 8 August 2012

நல்ல வேலை கிடைக்க யாரை வழிபட வேண்டும்?





வேலைதான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது; சமூகத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையைத் தீர்மானிக்கிறது; அவருக்கு அமையப்போகும் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. முன்பெல்லாம் ‘கால் காசுக்கு வேலை பார்த்தாலும் கவர்மென்ட் வேலை பார்க்கணும்’ என்றார்கள். இப்போது காலம் மாறியிருக்கிறது. ஆனாலும், அரசு வேலைக்காக அலைமோதுபவர்கள் இன்றைக்கும் உண்டு. எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைத்து விடும்; அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பிடித்த வேலை கிடைக்குமா என்பதுதான் இங்கு கேள்வி. ‘‘நான் படிச்சது மெக்கானிக்கல். வேலை பார்க்கறது பத்திரிகை ஆபீஸ்’’
என்று ஆர்வத்தின் காரணமாகக் கரை ஒதுங்குகிறவர்கள் உண்டு. ‘‘படிச்சது ஹிஸ்ட்ரி. ஆனா, வேலை பார்ப்பதோ சாஃப்ட்வேர்’’ என்று சம்பந்தமில்லாமல் வாழ்க்கை கொண்டுபோயும் தள்ளுகிறது. காலத்தின் கட்டாயத்தால் படித்தது வேறாகவும், பார்ப்பது வேறாகவும் இருக்கிறது.

‘‘நல்லாத்தான் படிச்சான். ஆனா, நல்ல வேலை கிடைக்கலையே’’ என்று ஆதங்கப்படுவோர் உண்டு. படிப்பை கொடுத்த கிரகம், ‘வேலை’ வாங்கித் தரும்
விஷயத்தில் மௌனமாகி விட்டது. பேசிப் பேசி தொண்டை வறள வேலை பார்ப்போர் உண்டு; குளுகுளு அறையில் கண்களாலேயே ஆணையிட்டுக் கொண்டு
பணம் பார்ப்போரும் உண்டு. ‘‘எவ்ளோ வேலை செஞ்சாலும் ஒரு அங்கீகாரமும் இல்லை’’ என்று புலம்புபவர்களும் உண்டு; வேலை பார்ப்பது போல நடித்தே முன்னேறுகிறவர்களும் உண்டு. வேலை என்பது அலுவலகத்திற்குச் சென்று ஒரு ஊழியராக இருப்பதோடு முடிந்து விடுவதில்லை; அதில் முதலாளியாக மாறுவதும் அடங்கியுள்ளது.

‘‘சின்ன வயசுலேர்ந்து அந்தப் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ஆனா, இப்ப எங்கயோ ஒரு சின்ன கம்பெனியில கிளார்க்கா வேலை பார்க்கறான்’’ என்பதற்கு என்ன
காரணம்? கல்லூரியில் பல அரியர்ஸ் வைத்துவிட்டு திடீரென்று உயர் பதவியில் அமருபவர்களை ஆள்பவர்கள் யார்? சரிந்து போன வாழ்க்கையைத் தூக்கி
நிறுத்திய ஆபத்பாந்தவன் யார்? ‘‘எனக்கு படிப்பு வாசனையே இல்லைங்க. ஆனா, இன்னிக்கு எம்.பி.ஏ. பசங்களுக்கு நான் வேலை சொல்லித் தர்றேன்’’ எனும்
படிக்காத மேதைகளை உருவாக்குபவர் யார்?

அந்த சக்திக்குப் பெயர்தான், காலம். ‘கால புருஷன்’ என்று அவனை அழைப்பார்கள். காலங்களின் கைகளில் இருக்கும் கிரகங்களின் வேலைதான் அது. ‘‘எல்லாம் நேரம், காலம் வந்தா தானா நடக்கும்ப்பா’’ என்று சாதாரணமாகச் சொல்லி வைத்தார்கள். ‘‘என்ன கிரகம் புடிச்சு ஆட்டுதோ’’ என்பதெல்லாம் சாதாரணமான கிராமத்துப் பழமொழி அல்ல. அனுபவத்தைப் பிழிந்தெடுத்த வார்த்தைகள். கிரகங்கள் உங்கள் நம்பிக்கையின் பேரில் இயங்கவில்லை. உங்கள்
நம்பிக்கைகளைப் பற்றி அவற்றுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவைகள் வெறும் அம்புகள்; கால புருஷனின் வில்லிலிருந்து புறப்பட்டு வரும் கணைகள்...

அவ்வளவுதான்! நம்பிக்கை கூட்டுவதும் கிரகங்கள்தான்; தன்மீது கொண்ட நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடச் செய்வதும் கிரகங்கள்தான்.
ஜோதிடம் வாழ்க்கையை பன்னிரண்டு பாவங்களாக பிரித்து வைத்துள்ளது. வாழ்க்கையின் சகல அம்சங்களையும் அதற்குள் வைத்து அலசுகிறது. அதில்
வேலைக்கென்று தனி இடத்தைக் கொடுத்திருக்கிறது. ஜோதிடம் ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடத்தைத்தான் வேலை ஸ்தானமாக வைத்திருக்கிறது.
‘பத்தை நான் தேடிப் பார்த்தேன். பாவி ஒருவன் இல்லை’ என்பது சித்தர் வாக்கு. உத்யோக ஸ்தானம் என்பது இந்த பத்தாம் இடமே. இதை தர்ம கர்ம ஸ்தானம் என்பார்கள். கர்மா என்பதை செயல் என்று கொள்வோம். இந்த பத்தாமிடம் செயலையும், செயல் திறனையும், செயலூக்கத்தையும், செயலின் வேகத்தையும் கூறுகிறது.

‘எடுத்த வேலையை முடிப்பாரா... அல்லது கிடப்பிலேயே வைப்பாரா’ என்று பேசும். ‘வங்கியில் வேலையா... அல்லது பள்ளியில் ஆசிரியரா...’ என்று கூட சுட்டிக் காட்டும். ‘நேர்மையான தொழிலா... அல்லது நீசத் தொழிலா’ என்பதையும் கூறலாம். ‘ஏமாற்றி பணம் சம்பாதிப்பாரா... வியர்வை சிந்திய வருமானமா...’ என்றும் ஆராயலாம். ‘இப்போதைக்கு கம்பெனியில் இவர் கடைநிலை ஊழியர். இன்னும் பத்து வருடங்களில் இந்த இடத்தையே வாங்கும் அளவுக்கு உயரப் போகிறார்’ என்கிற வாழ்க்கையின் உச்சத்தையும் இந்த பத்தாம் இடம்தான் தீர்மானிக்கிறது. ‘நேற்று வரை ஒரு கம்பெனியின் முதலாளி. ஆனால், இன்றோ வேறொரு இடத்திற்கு வேலைக்குப் போகும் சாதாரணத் தொழிலாளி’ என்று வாழ்க்கை பரமபதத்தைக் கூட பத்தாம் இடம்தான் காட்டுகிறது. ‘கூட்டுத்தொழிலா... ஐயோ, வேண்டாம். இட்லிக் கடை வைத்தாலும் தனியே வையுங்கள். நீங்கள்தான் இந்தத் துறையில் நம்பர் ஒன்’ என்றுகூட இந்த பத்தாம் இடத்தைப் பார்த்துச் சொல்லி விடலாம். உழைப்பின் ஆழத்தை, அகலத்தை, தீவிரத்தை, ஈடுபாட்டை, ரசனையைக் கூட அழகாக இந்த பத்தாம் இடம் சொல்லும்.

அதில் பொதுவாக சிலவற்றைப் பார்ப்போம்... ஒருவரின் ஜாதகத்தில் பத்தில் சூரியன் இருந்தால் அரசு உத்யோகத்தில் இருப்பார். சூரியன் ஏதோ சுமாரான பலத்தோடு இருக்கிறார் என்றால் கொஞ்ச நாளில் தனியார் நிறுவனத்திற்கு மாறுவார். அதிபலத்தோடு இருக்கிறது என்றால் அரசின் உயர்ந்த பதவிகளை
அனுபவித்து விட்டுத்தான் ஓய்வு பெறுவார். சந்திரன் பத்தில் என்றால், டெக்ஸ்டைல் பிசினஸ், எஞ்சினியர், இன்டீரியர் என்று வேலை மாறும். செவ்வாய் பத்தில் என்றால் காவல்துறை, தீயணைப்புத் துறை, உளவுத் துறை என்று பல்வேறு துறைகளில் அமர்வார். அதுவே புதன் என்றால் பத்திரிகையாளர், ஜோதிடர், ஆரம்பக் கல்வி போதிக்கும் ஆசிரியர் என்று பல வேலையை வாங்கித் தருவார்.

குரு பத்தில் அமர்ந்தால் பேராசிரியர், வங்கியில் மேனேஜர், ஆன்மிகப் பத்திரிகை என்று பல வேலைகள் அமையும். சுக்கிரன் அமர்ந்தால் நகை வியாபாரமும்
செய்வார்; அதேசமயம் கவிஞனாகவும் வலம் வருவார். சினிமாத் துறையில் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார். சனி பகவான் அமர்ந்தால், இரும்பு உலோகம் வார்த்தெடுக்கும் இடங்களிலும், எப்போதும் சத்தம் கேட்கும் தொழிற்சாலையிலுமே அமர்த்துவார். இதைத்தவிர சனி பலமாக இருந்தால் நீதிபதியாக அமர்த்துவார். நீதிபதியாவது என்பது சனி பகவானின் கைகளில்தான் உள்ளது. அவரோடு குரு சேரும்போது சிறந்த வழக்கறிஞராக மாறுவார்கள். பொதுவாகவே
இவர்கள் இருவரும்தான் நீதிமன்றம் சார்ந்த உத்யோகத்தை அளிப்பார்கள். ராகு பத்தில் அமர்ந்தால் ஏஜென்சி, புரோக்கரேஜ் வேலையில் அமர வைப்பார்.

கேது அமர்ந்தால் அர்ச்சகராவார். மிகச் சிறந்த மருத்துவராக வலம் வருவார். மேலே சொன்னவையெல்லாம் பொதுவானவை. ஒவ்வொரு ராசிக்கும் பத்தாம் இடத்தில் உள்ள ராசிக்கு யார் அதிபதி என்று பார்க்க வேண்டும். அவர் அந்த ராசிக்கு நட்பா, பகையா, உச்சமா, நீசமா என்று ஆராய்ந்துதான் எப்படிப்பட்ட வேலையில் அமர வைப்பார் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக இருபத்தைந்து வயதில் செவ்வாய் தசை நடக்கிறதெனில், இவர் ஜாதகத்தில் பத்தில் சனி அமர்ந்தால் கொஞ்சம் எதிர்மறையான பலன்கள்தான் நடக்கும்.

வாழ்க்கையின் பெரும் பகுதி வேலையில்தான் செல்கிறது. வீட்டில் இருக்கும் நேரத்தை விட அலுவலகத்தில் இருக்கும் நேரம்தான் அதிகம். உங்களைப் பற்றிய பல விஷயங்கள் உங்கள் மனைவியை விட, பக்கத்து சீட்டில் வேலை பார்ப்பவருக்கு துல்லியமாகப் புரியும். வீட்டின் நிம்மதியே வேலையில் இருக்கிறது.

அலுவலகக் கோபமே வீட்டில் வெடிகுண்டாக வெடிக்கிறது. வாழ்க்கையில் வெற்றியை நீங்கள் செய்யும் வேலைதான் தீர்மானிக்கிறது. அந்த வெற்றியை இந்த பத்தாம் இடம்தான் முடிவு செய்கிறது. படிப்பது என்பது வரை கிரகங்கள் ஒருவாறு வேலை செய்கின்றன. அதற்குப் பிறகுதான் உண்மையான ஆட்டமே ஆரம்பிக்கிறது. வரும் வாரத்திலிருந்து கிரகங்கள் என்னென்ன வேலையை யார் யாருக்குத் தருகின்றன என்று பார்ப்போம்.                                       

No comments:

Post a Comment