Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 166


பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பலமுள்ள கதிர்மைந்தன் பதியில் நிற்கில்
சீரப்பா யிளமையிலே மனோவியாதி
செழுமையுள்ள பருவத்தில் செல்வமுண்டு
வீரப்பா வேந்தனுட பொருளுஞ்சேரும்
விளங்குகின்ற கொடியோர்கள் சேரலாக
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே பதியறிந்து பலனைக் கூறே.


மேலும் ஒரு புதுமையினைக் கூறுகிறேன். அதனையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக. பலம் மிக்கவனாக பரிதி மைந்தனாகிய சனிபகவான் இலக்கினத்தில் நிற்கப் பிறந்த சாதகன் இளமையில் மனோவியாதி உள்ளவனாவான். அதாவது எவ்வாறு முன்னேற்றம் பெறுவது என எண்ணிக்கலக்கமுறுவான். யெளவனப் பருவத்தில் இவனுக்குச் செல்வம் வந்து சேர்ந்து மகிழ்வினைச் செய்யும் இச்சென்மனுக்கு அரசனுடைய செல்வமும் வாய்க்கும் எனினும் இவனுடன் தீயோர் சேரலாகாது என்பதையும் உணர்ந்து கிரக நிலவரமும் பலமும் சேர்ந்து பலன் கூறுக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

No comments:

Post a Comment