Tuesday 7 August 2012

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 159


பாரப்பா பகலவனுக் கஞ்சுயெட்டு
பாக்கியத்தில் சுபர்நிற்க அதனுள்ளோர்கள்
சீரப்பா திரிகோண கேந்திரமே
சிவசிவா பிதுருக்கு தனமும் செல்வம்
வீரப்பா விதியுண்டு வெள்ளிபுந்தி
வீடானால் அமடில்லை ராஜயோகம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே புலிபாணி கூறினேனே.


மற்றொரு விஷயத்தையும் உனக்குக் கூறுகிறேன். மனங்கொண்டு கேட்பாயாக! இராசி மண்டலத்தில் சூரியன் நின்ற இடத்திற்கு 5,8,9 ஆகிய இல்லங்களில் சுபகிரங்கள் நிற்க அத்தலத்திற்குரியோர் 1,5,9 ஆகிய திரிகோணமோ அல்லது 1,4,7,10 ஆகிய கேந்திரமோ தேறி நிற்பாரேயானால் சிவபரம் பொருளின் பேரருளால் அச்சாதகனின் பிதுருக்கு தனயோகமும், நிறைசெல்வமும், நல்லா ஆயுள் பலமும் உண்டாம். அந்த மனையும், சுக்கிரன் புதன் ஆகியோரின் வீடானால் எவ்விதத் துன்பமும் இல்லை. சிறந்த ராஜயோகமே ஏற்படும். இதனையும் போகரின் அருட்கருணையால் புலிப்பாணி கூறினேன்.

No comments:

Post a Comment